Header Ads

Header ADS

சகல துறைகளிலும் உறவுகளை வலுப்படுத்த இந்தியா அதிக முக்கியத்துவம்: அமைச்சர் வாசுவிடம் இந்தியத் தூதுவர்

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இன்று சந்தித்தார்.

சகல துறைகளிலும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக உயர் ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளினதும் பிரதமர்களுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது இந்த விடயம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருந்ததாக உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களின் முக்கியத்துவம் தொடர்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்த உயர் ஸ்தானிகர், தேசிய இலக்குகளின் அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களில் இந்திய அரசாங்கத்தின் அனுபவங்கள் மற்றும் சாதனைகளையும் குறிப்பிட்டிருந்தார். சமூக ரீதியிலான பங்களிப்புடன் இந்தியாவில் நீர் அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தேசிய அளவிலான சுகாதார திட்டங்கள் ஆகியவற்றின் கருத்தாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் கௌரவ அமைச்சர் அவர்களுக்கு உயர் ஸ்தானிகர் பரந்தளவிலான தகவல்களை இந்த சந்தர்ப்பத்தில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீர் பற்றாக்குறை காணப்படும் பிரதேசங்கள் மற்றும் பாடசாலைகளில் நீர் தேவைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ள விடயங்கள் குறித்து அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆளுமை விருத்தி மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஆகியவற்றினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கருதுகோள்கள் குறித்து இந்தியாவுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை அமைச்சர் அவர்கள் வரவேற்றிருந்தார்.

சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்த விடயங்களில் இலங்கையின் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாக உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.